தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மூன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கூட்டரில் கொண்டு செல்லப்பட்டன. இதனைக் கண்ட பொதுக்கள் அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சூழலில் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் எடுத்து சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றது இயந்திரங்கள் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்டவை அல்ல. இவை பழுதான மாற்று இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் என தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பிரகாஷ் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது முழுக்க முழுக்க விதிமீறல்.

அந்த மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டு 15 வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும். மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா என்பது பற்றியும் தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் முன்னுக்கு பின் முரண்பாடாக பேசுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. இது தமிழக சட்டமன்ற தேர்தலில் தில்லுமுல்லு நடக்கிறதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

See also  தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது..!