கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் மூன்றாவது அலை அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையில் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. கொரோனா மூன்றாவது அலை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மேலும் கொரோனா இரண்டாவது அலையைக் காட்டிலும் மூன்றாவது அலையை சிறப்பாகக் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும் கொரோனா நோய் தொற்று இன்னும் ஒரு வருடத்திற்கு பொது சுகாதார துறைக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும் என்று மருத்துவ நிபுணர்களின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயியல் நிபுணர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், வைராலஜிஸ்டுகள், 40 சுகாதார வல்லுநர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பேராசிரியர்கள் ஆகியோரின் கணக்கெடுப்பில், தடுப்பூசிகளில் கணிசமான பயன்பாடு கொரோனா பரவலைக் கட்டுப்பட்டுத்தும் என்பதைக் காட்டுகிறது.

கொரோனா வைரஸின் மூன்றாம் அலையால், குழந்தைகள் மற்றும் 18 வயதிற்குட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு வல்லுநர்கள் ‘ஆம் ‘ என்று பதில் கூறினார்கள். ஆனால் பதினான்கு நிபுணர்கள் குழந்தைகளுக்கு ஆபத்து இல்லை என்றும் கூறினர். மேலும் மூன்றாம் அலையால் நிலைமை கடுமையாக மாறக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், நோய் எதிர்ப்பு சத்து குறைவாக உள்ள குழந்தைகள் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள், ஆனால் பகுப்பாய்வில் கடுமையான உடல்நல பாதிப்பு குறைவாகக் காட்டுகிறது என்று தெரிவித்தார்.

See also  மத்திய அரசின் அவசரகால கடன் திட்டம் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு