வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், நாளை, நாளை மறுநாளும் விடுமுறை நாட்கள் அதனால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.

ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து நாளை, நாளை மறுநாள் (சனி, ஞாயிறு) விடுமுறை நாட்களாகும், அதனால் இந்த நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.

இதை அடுத்து வரும் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

அரசியல் கட்சியினர் மொத்தம் 6 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். இந்த நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை உறுதி செய்துவிட்டார்கள். இதற்கான பட்டியலை படிப்படியாக வெளியிட்டு வருகிறார்கள்.

வேட்பாளர்கள் அனைவ்ரும் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

வருகிற 19ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதனால் அவரவர் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் தயாராகி வருகின்றனர். சிலர் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்கள்.

பொதுத் தொகுதிக்கு ரூ .10,000 -மும் , தனித் தொகுதிக்கு ரூ .5,000 -மும் செலுத்தி மனு தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழக முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வருகிற 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். மேலும் இன்று போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

மனுதாக்கல் செய்யும் இடத்தில் இருந்து 100 மீட்டர் வரை இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் நிறைய பேர் மனு தாக்கல் செய்ய வந்தால், தேர்தல் அதிகாரிகள் அவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் அவர்கள் வரவேண்டும் என்று அறிவுறுத்துவார்.

இதையடுத்து வரும் 20ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும்.வரும் 22ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

See also  சசிகலாவின் பல கோடி சொத்துக்கள் தமிழகத்திற்கு திரும்பிய மூன்று நாட்களுக்குள் பறிமுதல் செய்யப்பட்டன

அன்று மாலையே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறுகிறார்கள்.

மேலும் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

இதையடுத்து ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று, உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.