புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, என்ஆர் காங்கிரஸ், அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் பங்கு வகிக்கிறது. கூட்டணி ஒப்பந்தப்படி என்ஆர் காங்கிரசுக்கு 16 தொகுதியும், பாஜக-அதிமுகவிற்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்து வந்தது. இதையடுத்து என்ஆர் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரை மீண்டும் முதல்வர் வேட்பாளராக அக்கட்சி நடத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த செயற்குழு கூட்டத்தில் புதுச்சேரியில் மிக சுமுகமாக ராஜதந்திரத்தோடு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாக ரங்கசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி புதுச்சேரி மாநிலத்தில் நீண்டகாலம் முதல்வராக இருந்து மக்களுக்கு சேவை செய்து வரலாற்றுச் சாதனையைப் படைத்தவர். இவர் மீண்டும் கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வரும் தேர்தலில் பிரச்சாரத்தின் போது ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக பிரகடனப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாக என்ஆர் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்குப் பின் அக்கட்சியினர் கூறியுள்ளார்கள்.

 

See also  ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் தொடக்கம்