பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை இப்போதைக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் கொண்டு வர வாய்ப்பு இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவரப்படுமா என்று மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு மக்களவையில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், சமையல் கியாஸ் சிலிண்டர்,இயற்கை எரிவாயு ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவரும் திட்டம் ஏதும் இல்லை.

பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் எப்போது கொண்டுவரலாம் என்ற தேதியை சட்டப்படி ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் பரிந்துரைக்க முடியும்.

ஆனால், இப்போதுவரை, ஜி.எஸ்.டி. கவுன்சில், பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவரும் தேதி குறித்து ஏதும் பரிந்துரைக்கவில்லை என்று அதில் தெரிவித்து இருந்தார்.

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் ” கடந்த ஆண்டில் பெட்ரோல் மீதான உற்பத்திவரி லிட்டருக்கு ரூ.19.98 ஆக இருந்தது. ஆனால், தற்போது லிட்டருக்கு ரூ.32.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல டீசல் மீதான உற்பத்தி வரி கடந்த ஆண்டில் ரூ.15.83 ஆக இருந்தது, தற்போது லிட்டருக்கு ரூ.31.80 ஆக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

See also  த.மா.கா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது