மியான்மரில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. ” யாங்கோன் ” என்ற நகரத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. பக்கோ, மூன், கரீன், ஏராவடி உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு இப்பொழுதும்  தமிழ் மொழி பேசப்பட்டு, கலாசாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட்டு வருகிறதாம் .

1962 முதல் 2011 வரை என சுமார் 49 ஆண்டுகளுக்கு மியான்மரை ராணுவம்தான் ஆட்சி செய்தது. ராணுவத்தின் ஆட்சியில் உரிமைகளை இழந்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு , மக்கள்  2015-ஆம் ஆண்டு முதல் சுவாசிக்க தொடங்கிய சுதந்திர காற்று இப்பொழுது மீண்டும் பறிக்கப்பட்டுவிட்டது  என்று மியான்மரின் யாங்கோன்  நகரை சேர்ந்த பர்மிய திரைப்பட இயக்குநரும், தமிழருமான சுந்தர்ராஜ் கூறுகிறார் .

தமிழர்களின் பிரச்சனைகள்

மியான்மர் வாழ் தமிழர்களான இயக்குநர் சுந்தர்ராஜ் மற்றும் வழக்குரைஞரான அகத்தியன் ஆகிய இருவரும்  வெளிப்படுத்திய பிரச்சனைகள்.

பல்வேறு காரணங்களுக்காக   தமிழர்கள் பல நூறாண்டுகளுக்கு முன்பாகவே  மியான்மருக்கு வந்ததாகவும், இப்போது அங்கு வசிக்கும் தமிழர்கள் அனைவரும் தங்களை ‘தமிழர்கள்’ என்று அழைத்துகொள்வதில் எந்தளவுக்கு பெருமிதம் கொள்கிறார்களோ, அதே அளவுக்கு தாங்கள் ‘மியான்மர் குடிமகன்’ என்றும் ‘மியான்மர் தமிழர்’ என்றும் கூறிக்கொள்வதிலும் பெருமிதமடைவதாக கூறுகிறார்கள்.

1962ஆம் ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரம் மற்றும் அதைத்தொடர்ந்து பயத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கப்பல்களில் தமிழகத்துக்கு திரும்பினர்கள். அப்போது அங்கு இருந்த தமிழர்கள் மியான்மரையே தங்களது தாய்நாடாக கருதினார்கள்.  இன்று வரை அந்த கருத்தில் உறுதியாக உள்ளார்கள் ” என்று சுந்தர்ராஜ் கூறுகிறார்.

“மற்ற இனத்தை சேர்ந்தவர்களை போலவே, தமிழர்களும் மியான்மரில் எண்ணற்ற துன்பங்களுக்கு உள்ளாகி உள்ளனர். தமிழர்கள் வசித்து வந்த நிலங்கள் காரணம் ஏதுமின்றி பறிக்கப்பட்டு உள்ளது. ராணுவ ஆட்சியில், வேலைவாய்ப்பு, கல்வி என்று எங்கு சென்றாலும் தமிழர்களுக்கு சமஉரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. மியான்மரின் குடிமகனுக்கு உரிய சலுகைகளை பெற தேவையான தேசிய அடையாள அட்டை, 90%-க்கும் அதிகமான தமிழர்களுக்கு இன்னமும் கூட வழங்கப்படவில்லை என்று கூறுகிறார் சுந்தர்ராஜ்.

இதன் காரணமாக, மியான்மர் தமிழர்கள் சிறந்து கல்வி பெறுவதும், நல்ல வேளையில் இருப்பது என்பது கடினமானதாக உள்ளது என்று கூறுகிறார். மியான்மரில் தமிழர்களை உயர்ந்த படிப்புக்கள் படிக்க வைப்பது கடினம். அதாவது மருத்துவராக, பொறியாளராக, அரசு ஊழியராக பார்ப்பது மிகவும் அரிது. தமிழர்கள் பெரும்பாலும் தூய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் என கடைநிலை ஊழியர்களாகவே இன்னமும் நீடிக்கின்றனர். இதற்கு காரணம்  தேசிய அடையாள அட்டை இல்லாதது. இதனால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மறுக்கப்படுகிறது.

See also  கொரோனா பரவலால் காரணமாக ரயில்கள் இயக்கம் சீராவதில் சிக்கல்

எனினும் , 2015ஆம் ஆண்டு ஆங் சாங் சூச்சி ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழர்கள் உள்ளிட்ட மற்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது.மேலும், நீதித்துறை, கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ராணுவத்தின் ஆட்சியில் பாரபட்சம் பார்க்கபட்டதாகவும், அந்த நிலைமை படிப்படியாக மாறி வந்த நிலையில்  மீண்டும் கனவுபோல் மாறிவிட்டதாகவும் வேதனைப்படுகிறார் சுந்தர்ராஜ்.

இந்த இராணுவ ஆட்சினால் கடந்த ஆறு ஆண்டுகளாக சுவாசித்து வந்த சுதந்திர காற்று ஒரே இரவில் முடிவுக்கு வந்தது என்பது, கண் தெரியாத, வாய் பேச முடியாத, காது கேட்காத ஒருவரை அடர்ந்த காட்டுக்குள் தனியாக அடைத்தது போன்றுள்ளதாக அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

இராணுவ ஆட்சிக்கு “எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கடந்த ஒரு வாரமாக தினமும் இரவு எட்டு மணிக்கு வீட்டிலுள்ள பாத்திரங்களை வைத்து ஒலி எழுப்பி வந்தோம். மக்களாட்சிக்கு ஆதரவான இந்த ஒற்றுமை ஒலி, உணர்ச்சிவசப்பட்டு எங்களது கண்களில் கண்ணீரை வரவைக்கிறது. ஆனால் ராணுவமோ, இதுபோன்று ஒலி எழுப்புவதை பற்றி யாராவது ஒருவர் புகாரளித்தாலும், ஊரிலுள்ள அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவோம் என்று எச்சரிக்கை விடுக்கிறது.

49 ஆண்டுகால ராணுவ ஆட்சியில் உரிமைகள் பறிக்கப்பட்டு, சொத்துகள் முடக்கப்பட்டு, கல்வி – வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டு வாழ்ந்த நாட்கள் இனி ஒருபோதும் திரும்ப வரக்கூடாது  என்று ஒவ்வொரு நாளும் மியான்மர் மக்கள் வேண்டிக்கொள்வதாக கூறுகிறார் சுந்தர்ராஜ்.

இராணுவ ஆட்சியின் போது எங்கு சென்றாலும், எதை செய்தாலும் “எங்களை வேற்றுமைப்படுத்துகிறார்களே” என்ற எண்ணம் மியான்மர் தமிழர்களிடத்தில் நிலவி இருந்தது, அந்த உணர்வு ஆங் சாங் சூச்சி ஆட்சிக்கு வந்ததும் முற்றிலும் மாறிவிட்டது என்று  கூறும் சுந்தர்ராஜ், சூச்சியை மியான்மரின் ‘அம்மா’ என்று குறிப்பிடுகிறார்.

எங்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்திய ஆங் சாங் சூச்சியை 20 ஆண்டுகளுக்கு மேல் வீட்டுக் காவலில் வைத்தது ராணுவம். மக்களுக்காகவே தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்த அவர் மியான்மருக்கே ‘அம்மா’ ஆவார். அவர் வழங்கிய அறிவுரை, ஏற்படுத்தி கொடுத்த திட்டங்களை வைத்து கொண்டு  நாங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக, கொரோனா உள்ளிட்ட பிரச்சனைகளையும் தாண்டி நம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம்” என்று சுந்தர்ராஜ் கூறுகிறார்.

மியான்மரில் பல மொழிகள் பேசப்பட்டாலும், பர்மிய மொழியே அனைத்து மட்டங்களிலும் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது . குறிப்பாக, பர்மிய மொழியை மட்டுமே மையமாக கொண்ட மியான்மரின் திரைத்துறை, மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இயங்குவதாக கூறப்படுகிறது. பர்மிய திரைத்துறையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கடைநிலை ஊழியராக இருந்த சுந்தர்ராஜ் , இன்று 40க்கும் மேற்பட்ட படங்களுக்கு இயக்குனராக விளங்குகிறார்.

See also  டெல்டா வைரஸ் அடுத்த அலையை வேகப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை