ஊரக தபால் ஆயுள் காப்பீடு, தபால் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிகளுக்கான நேர்முகத்தேர்வு வரும் 9ம் தேதி சென்னை தாம்பரம் தபால் அலுவலங்களின் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தாம்பரம் கோட்டம், தபால் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் டி.வி.சுந்தரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தபால் ஆயுள் காப்பீடு, ஊரக தபால் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள், தாம்பரம் தபால் அலுவலங்களின் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 9ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் நடத்திய பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முகவர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். வரும் 9ம் தேதியன்று, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 50 ஆகவும் இருக்க வேண்டும்.

காப்பீடு நிறுவனத்தின் முன்னாள் ஆயுள் காப்பீடு ஆலோசகர்கள், முகவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சங்க ஊழியர்கள்,முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், சுயஉதவிக் குழுவினர், கிராமத் தலைவர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், வேலை இல்லாத, சொந்த தொழில் செய்யும் படித்த இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அசல் சான்றிதழ் மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

See also  தமிழகத்தில் ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு