காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடன் வாங்கிய சுய உதவி குழு உறுப்பினர்கள் மாத தவணையை கட்டவில்லை என்றால் நாளொன்றுக்கு 1,000 ரூபாய்க்கு 20 ரூபாய் வட்டி கொடுக்க வேண்டும் என்று மகளிர் சுய உதவி தலைவி மிரட்டிய பேசியுள்ள அதிர்ச்சி ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு அரசு தற்போது தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த ஊரடங்கால் பலரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனியார் ஏஜென்சிகள், நிறுவனங்கள் கடன்களை வசூலிப்பதில் கடுமையாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் கடன் வசூலிப்பதில் கறார் காட்ட கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் மக்களுக்கு அரசு பல நிதி உதவிகளையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை வசந்தம் நகரில் செயல்படும் மகளிர் சுய உதவி தலைவி மிரட்டிய பேசியுள்ள ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் “ நீங்கள் பெற்ற கடனை உடனடியாக செலுத்தவில்லை என்றால், 1000 ரூபாய்க்கு ஒரு நாளைக்கு 20 ரூபாய் வட்டி கொடுக்க வேண்டும். இதில் எந்த சமரசமும் இல்லை.” என்று பேசியுள்ளார்.

தனது குழு உறுப்பினர்களுக்கு அவர் அனுப்பிய இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடன் வாங்கும் நிறுவனங்கள் சுய உதவிக்குழுக்களை கடன் வசூலிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என அரசு வலியுறுத்தியும் இவ்வாறு மிரட்டல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

See also  டீ விற்பனை செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக வேட்பாளர்