ஹைலைட்ஸ்:

  • தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
  • எந்த வகையிலும், என் பதவியையோ, என் பெயரோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது.
  • நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது.

நான் தலைமை செயலாளர் பதவியில் இருக்கும் வரை என் நூல்களை வாங்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு வெ.இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு பள்ளிக் கல்வித்துறைக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நான் பணி நேரம் முடிந்த பிறகும், விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களை வைத்தும் சில நூல்களை எழுதி உள்ளேன். இவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை.

இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக நான் பள்ளிக்‌ கல்வித்துறைக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளேன்‌. அதில் நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன். மேலும் பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால்தான் இத்தகைய வேண்டுகோள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். எந்த வகையிலும், என் பதவியையோ, என் பெயரோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே என்னுடைய நோக்கம்.

2006 ஆம்‌ ஆண்டு, அரசு விழாக்களில்‌ பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள்‌ வழங்கினால்‌ நன்று என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அந்தவகையில், அரசு விழாக்களில்‌ அரசு அலுவலர்கள்‌ யாரும்‌ என்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில்‌ விநியோகிக்க வேண்டாம்‌ என்று அன்புடன்‌ கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வேண்டுகோளை மீறினால் அரசு செலவாக இருந்தால்‌ இது தொடர்புடைய அதிகாரியிடம்‌ வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில்‌ செலுத்தப்படும்‌. சொந்த செலவு செய்வதையும்‌ தவிர்ப்பது நல்லது. எக்காரணத்தாலும் இத்தகைய சூழலை ஏற்படுத்த வேண்டாம்‌ என அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌ என கடிதத்தில் கூறியுள்ளார்.

See also  குழந்தைகளை ஆட்டி படைக்கும் கொரோனா..!