ஆடி மாதம் அந்த காலத்திலிருந்தே மிக முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் மக்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆடியில் விதை விதைத்து, கார்த்திகை மற்றும் தை மாதங்களில் அறுவடை செய்வார்கள். ‘ஆடிப்பட்டம் தேடி விதை‘ என்று பழமொழியே உண்டு.

ஆடியில் விதை விதைத்தல், பயிரிடுதல், குடிசைத் தொழில் செய்தல், துணி நெய்தல் போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்த கூடிய முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள்.

ஆடியில் மாதத்தில் பூர்வாங்க வேலைகளைச் செய்தால் தான் கார்த்திகை மற்றும் தை மாதங்களில் பயிர் அறுவடை செய்ய முடியும். பயிர் அறுவடை செய்யும் போது கைக்கு பணம் வர வாய்ப்பு இருக்கும். இந்த சமயத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண வைபவங்களுக்குப் பணப் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும். ஆடி மாதத்தில் விவசாயத்திற்கு செலவு செய்ய வேண்டி இருப்பதால், கல்யாணம், விருந்து போன்ற விசேஷங்களுக்கு செலவு செய்யப் பணம் இருக்காது. அதனால் தான் வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெறாமல் இருந்ததே தவிர, ஆடியில் திருமணங்கள் செய்யக் கூடாது என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை.

அதேபோல் ஆடி மாதம் முழுவதும் இறைவனை நினைத்து தினமும் வணங்கி வழிபடுவதற்காகவும், அவரை தவிர வேறு எண்ணங்கள் வரக்கூடாது என்பதற்காகவும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்கள் இந்த மாதத்தில் நாம் செய்வதில்லை. ஆனால் ஆடி மாதத்தில் எல்லாநாட்களும் விசேஷமான நாட்களாக தான் கருதப்படுகிறது.

ஒரு வருஷத்தை போக சம்பிரதாயம், யோக சம்பிரதாயம் என இரண்டாகப் பிரித்து இருப்பார். இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலத்தை போக சம்பிரதாய காலம் என்றும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலத்தை யோக சம்பிரதாய காலம் என்றும் குறிப்பிட்டனர்.

போக சம்பிரதாய காலத்தில் திருமணம், விருந்து என்று சந்தோஷமான விசேஷங்களை செய்வார்கள். யோக சம்பிரதாய காலத்தில் பூஜைகள், பிரார்த்தனைகள், தபஸ், யாகம், யக்ஞம் போன்ற தெய்வீக விசேஷங்களை செய்வார்கள். யோக சம்பிரதாய காலத்தில் ஆடி மாதம் முதலில் வருவதால், அந்த மாதத்தில் தெய்வீக விசேஷங்கள் அதிகம் இருக்கும்.

ஆடி பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப் பெருக்கு, ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடிப் பவுர்ணமி என்று ஆடி மாதம் முழுவதுமே விசேஷமான நாளாக இருக்கும். ஆடி மாதத்தில் சந்திரன் சொந்த வீட்டில் இருக்கிறார். சொந்த க்ஷேத்திரத்தில் சூரியனுடன் சந்திரனுக்கு சம்பந்தம் உண்டாகும் பொழுது, அந்த மாதத்தில் பூஜைகள், பிரார்த்தனைகள் அதிகம் இருக்கும். ஆடி மாதத்தில் பகவத் தியானம் செய்வது மிகவும் நல்லது.

See also  ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு பதக்கம்: மீராபாய் சானுவுக்கு தலைவர்கள் வாழ்த்து