ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயின்றவர்களுக்கு தேர்வு கிடையாது என்ற புதிய விதிமுறை 2021 ஜூலை 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கான விதிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1. டிரைவிங் பயிற்சி பெற வரும் நபர்களுக்கு, தரமான பயிற்சியை வழங்க, இந்த ஓட்டுநர் பயிற்சி மையங்கள் ‘சிமுலேட்டர்’- வாகனம் போன்ற வடிவமைப்பு, டிரைவிங் பழகுவதற்கான பிரத்யேக பாதை ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

2. மோட்டார் வாகன சட்டம் , 1988- ன் கீழ் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஓட்டுநர்களுக்கு புத்தக படிப்பு மற்றும் பயிற்சி வசதிகள் கிடைக்க வேண்டும்.

3. இந்த ஓட்டுநர் பயிற்சி மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்களுக்கு, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போது, ஓட்டுநர் பரிசோதனை தேர்வில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தாலே அந்த ஓட்டுநருக்கு உரிமம் கிடைத்துவிடும்.

4. தொழில்ரீதியான சிறப்பு பயிற்சியை அளிக்கவும் இந்த ஓட்டுநர் மையங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

மேலும் சாலை விதிமுறைகள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் சாலை விபத்துக்கள் அதிகளவில் நிகழ்கிறது. சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்கள் தொடர்பான விதிமுறைகளை உருவாக்க, மத்திய அரசுக்கு மோட்டார் வாகன திருத்தம் சட்டம் 2019 அதிகாரம் வழங்குகிறது.

 

See also  கல்லூரி மாணவா்களுக்கான மறுதேர்வுத் தேதி அறிவிப்பு - அண்ணா பல்கலைக்கழகம்