மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் சேர்க்க விடாமலும் அனுமதி தராமலும் இடையூறு தமிழக அரசு செய்துவருவதாக MNM கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை வடக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் தங்கவேலு வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் சென்ற அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தமிழக அரசு என்னுடைய பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் சேர்க்க விடாமலும், அனுமதி தராமலும் இடையூறு செய்து வருவதாக கூறினார்.

கல்லூரிகளில் உள்ள மாணவ மாணவிகளை நான் சந்திக்க கூடாது என்று 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே மறைமுக உத்தரவை போட்டுள்ளது. எங்கள் கட்சி பொருளாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்துவதில் உள்நோக்கம் இருக்கலாம் என்று கூறினார்.

மக்கள் நீதி மய்யக் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. எல்லோரும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு வெளியிடலாம் என காத்திருந்தோம். ஏனெனில், 2 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கூறியவைகளை தற்போது காப்பி அடித்து மற்ற கட்சிகள் வெளியிடுகின்றன. விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடுவோம்.

நான் ஹெலிகாப்டரில் வந்து பிரசாரம் செய்வதாக கூறியுள்ளனர். பஸ்களில் பயணித்த எனக்கு ஹெலிகாப்டரில் செல்லும் ஆசையில்லை. ஒரு இடத்திற்கு விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக தான் ஹெலிகாப்டரில் சென்றேன் என்று கூறினார்.

See also  இன்றைய ராசிபலன்