கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளும், கல்லூரிகளும் நாளை முதல் தொடங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இதனால் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களின் வருகைக்காக பள்ளிகளில் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம், நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாது என்று திடீரென அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரியில் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாது. பள்ளி-கல்லூரி திறப்பதை குறித்து பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் நோய் தொற்று இன்னும் முழுமையாக குறையவில்லை. எனவே பள்ளி திறப்பு குறித்து மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து வந்தது. இந்த கோரிக்கை தொடர்பாக புதுச்சேரி முதமைச்சர் ரங்கசாமி சார்பில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் ஆலோசனை நடத்தினோம்.

இந்த ஆலோசனையில் நாளை பள்ளி திறப்பதை ஒத்திவைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.மேலும் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற விவரம் பின்னர் வெளியிடப்படும். இப்போதைக்கு பள்ளி- கல்லூரி திறப்பு குறித்த தேதியோ, மாதமோ குறிப்பிட இயலாது என்றும், பள்ளி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நிலை உருவாக்கப்பட வேண்டும் என்றும் மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து இருக்கிறார்.

தமிழகத்தில் வருகிற 1-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து நாளை ஆலோசனை நடைபெற உள்ளது

See also  இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கலாம் - தலைமை செயலாளர் உத்தரவு