ஹைலைட்ஸ்:

  • ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி.
  • ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
  • ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை இல்லை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு ஆக்சிஜன் தேவை என்பதை பற்றிய விவரம் மத்திய அரசிடம் உள்ளது. அதனால் ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையில் தமிழகமே ஸ்டெர்லைட் ஆலையை ஏற்று நடத்தலாம் என்று யோசனை கூறியது. இதைத்தொடர்ந்து , நேற்று தமிழக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்தோடு சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு  4 மாதங்கள் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஆலையை திறக்க அனுமதி அளிப்பதாக கூறியது.

மேலும் ஆக்சிஜனை தவிர வேறு எந்த அலகுகளையும் ஸ்டெர்லைட் இயக்கக்கூடாது என்றும் ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

உச்சநீதிமன்றம்

அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் தமிழக அரசு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்ததுள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்கும் ஐந்து நிபுணர்களையும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் தேர்வு செய்யும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய தொகுப்பில் ஒப்படைக்க வேண்டும். இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு ஆக்சிஜன் தேவை என்பதை பற்றிய விவரம் மத்திய அரசிடம் உள்ளது.

அதனால் ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க முடியாது. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசே பிரித்துக்கொடுக்கும் என உச்சநீதிமன்றம் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.

See also  ஆபத்தான விண்கல் பூமியை நெருங்குகிறது