குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 2021- 22ஆம் கல்வியாண்டில் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது 1-ஆம் வகுப்புகளில் 25 % ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க விரும்புபவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைமுறைகள் ஜூன் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் 25 % ஒதுக்கீட்டில் தங்களின் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் https://rte.tnschools.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

தனியார் பள்ளியில் உள்ள இடங்களை விட அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் ஆகஸ்ட் 10 ஆம் தேதி குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதே தினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரங்களைப் பள்ளி அறிவிப்புப் பலகையிலும், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும் வெளியிட வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்து இருக்கிறது.

இந்த மாணவர் சேர்க்கை நடைமுறையில் ஏதேனும் புகார் இருந்தால் தெரிவிக்கலாம் என்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பெற்றோர்கள் ஏதேனும் புகார் அல்லது ஆலோசனைகளை வழங்க விரும்பினால் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் அல்லது தொடக்கக் கல்வி இயக்குநரிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

See also  அன்னை தெரசாவின் எழுச்சியூட்டும் மேற்கோள்கள்