சுவையான மொறுமொறுப்பான ரிப்பன் பக்கோடா பலருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ். இந்த கொரோனா காலத்தில் வீட்டியே சுற்றி சுற்றி வரும் குழந்தைகளுக்கு இது போன்ற பிடித்தமான ஸ்நாக்ஸ்களை சுலபமாக வீட்டிலேயே செய்துக்கொடுக்கலாம். ரிப்பன் பக்கோடா எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1 கப்

கடலை மாவு – 1 /2 கப்

வெண்ணெய் (உப்பு சேர்க்காதது) – 1 /4 தேக்கரண்டி

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி(விருப்பத்திற்கேற்ப)

எள்ளு – 1 /2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க

தண்ணீர் தேவையான அளவு

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, எள்ளு, வெண்ணெய், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக மாவு பிசைந்து கொள்ளவும்.

பின்னர் வாணலில் பொரிப்பதற்கு ஏற்ற அளவு எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து சூடு செய்யவும். பிறகு முறுக்கு அச்சில் உள்ள ரிப்பன் பக்கோடா அச்சை எடுத்து, அதில் எண்ணை தடவி, கலந்து வைத்துள்ள மாவை வைத்து அழுத்தி, காயும் எண்ணெயில் பாத்திரம் பிடிக்கும் அளவுக்கு பிழிந்து விடவும்.

எண்ணெயில் பிழிந்த இந்த பக்கோடாக்களை பொன்னிறமாகும் வரை திருப்பிப்போட்டு பொரித்து எடுத்தால் சுவையான, மொறுமொறுப்பான ரிப்பன் பக்கோடா சுவைக்கத் தயார்.

இந்த சுவையான ரிப்பன் பக்கோடாவை சூடு ஆரிய பின்பு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்து தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து சுவைக்கலாம்.

குறிப்பு:

நிறைய ரிப்பன் பக்கோடா செய்ய விரும்புபவர்கள், முதலில் மாவு மற்றும் தூள்களை மட்டும் கலந்து வைத்துக் கொள்ளவும். பொரிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் சேர்த்து பிசைந்தால் போதும்.
பொரிப்பதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே மாவை பிசைந்து வைத்தால் மாவின் நிறம் மாறிவிடும். மேலும் அதன் மொறு மொறுப்பும் குறைந்து விடும்.

See also  தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!