கொரோனா மூன்றாவது அலை வந்தால் எதிர்கொள்ள மாநிலங்களின் பங்களிப்புடன் கூடிய 23 ஆயிரத்து 123 கோடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா மூன்றாவது வந்தால் அதனை எதிர்கொள்ளும் வகையில் இரண்டாவது கட்ட அவசர கால சிறப்பு நிதி தொகுப்பு திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஒன்றிய அரசின் கீழ் உள்ள எய்ம்ஸ் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ மனைகளில் 1688 படுக்கைகளை மறு பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இ-சஞ்சீவினி திட்டத்தில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் தொலைபேசி அழைப்புகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை 5 லட்சமாக அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதல் எந்திரங்களும் வழங்கப்படும் அவசர கால சிறப்பு நிதி தொகுப்பில் ஒன்றிய அரசின் பங்களிப்பு 15,000 கோடி என்றும் மாநிலங்களின் பங்களிப்பு 8123 கோடி ரூபாய் எனவும் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் லக்ஷ்மன்பாய் மண்டாவியா தெரிவித்துள்ளார்.

இந்த நிதியில் நாட்டில் உள்ள 736 மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கான மருத்துவ பிரிவுகள் உருவாக்கப்படும், 20,000 அவசர சிகிச்சை படுக்கைகள் உருவாக்கப்பட்டு அதில் 20 சதவீதம் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதலாக 8800 ஆம்புலன்ஸ்கள் சேர்க்கப்படும். 1050 திரவ ஆக்ஸிஜன் சேமிப்பு கொள்கலன்கள் நிறுவப்பட்டு குழாய் வழியாக ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் அமைப்பு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு யூனிட்டாவது அமைக்கப்படும்.

கொரோனா சிகிச்சையில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்கள், இறுதி ஆண்டு மருத்துவம், செவிலியர் படிப்பு மாணவர்களை ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் அடுத்த 9 மாதங்களில் செயல்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் லக்ஷ்மன்பாய் மண்டாவியா கூறியுள்ளார்.

See also  அயலான் திரைப்பட பாடலை ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்டரில் வெளியிட்டார்