அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ‘விர்ஜின் கேலக்டிக்’ சோதனை முயற்சியாக ஐந்து பேர் கொண்ட விண்வெளி குழுவை இன்று விண்வெளிக்கு அனுப்புகிறது. இந்த விண்வெளி குழுவில் இந்திய வம்சாவளி சேர்ந்த விண்வெளி வீராங்கணையான ஸ்ரீஷா பண்ட்லா இடம் பெற்றுள்ளார்.

விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ள ஸ்ரீஷா பாண்ட்லா இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்றாவது பெண் என்ற பெருமையை கொண்டுள்ளார். இவர் ஆந்திர மாநிலம் குண்ட்டூரை பூர்வீகமாகக் கொண்டவர். விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தில் ஸ்ரீஷா அரசு விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத் தலைவராக இருக்கிறார்.

கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ்க்கு பிறகு விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்றாவது விண்வெளி வீராங்கனையாக ஸ்ரீஷா பாண்ட்லா உள்ளார். நியூ மெக்சிகோ ஏவுதளத்தில் இருந்து யூனிட்டி-22 விண்கலம் மூலமாக விண்வெளி வீரர்கள் இன்று புறப்பட உள்ளனர்.

‘யூனிட்டி 22’ விண்கலம் விர்ஜின் கேலக்டியின் இரட்டை விமானங்களுக்கு நடுவில் பொருத்தப்பட்டுள்ளது. யூனிட்டி 22 விண்கலத்தில் இருக்கும் ஹைபிரிட் ராக்கெட் மோட்டார் இயங்கத் தொடங்கியதும், இந்த விண்கலம் விண்வெளியை நோக்கி பயணிக்க தொடங்கும். மேலும் இந்த இரட்டை விமானங்கள் 50,000 அடி உயரம் பறந்ததும், அங்கிருந்து யூனிட்டி விண்கலத்தை விடுவித்துவிடும். அடுத்த ஆண்டு இந்த விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சுற்றுலா பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

See also  கருப்பு பூஞ்சை தொற்று குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! - தமிழக அரசு