ஹைலைட்ஸ்:

  • கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) ரூ.7 லட்சம் வரை நிவாரணம் அளிக்கிறது.
  • ரூ.6 லட்சமாக இருந்த இழப்பீடு தொகை, கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியிலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஊழியர் குறைந்தது ஒரு வருடமாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கவேண்டும்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) ரூ.7 லட்சம் வரை நிவாரணம் அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.

தனியார் நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு வேலைப்பார்ப்பவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்து இருந்தால், இவர்களுடைய குடும்பத்துக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை இழப்பீடு வழங்குகிறது.

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் PF கணக்கு வைத்திருந்தால் மட்டுமே, இந்த நிவாரணத்தை பெற முடியும்.

PF கணக்கு வைத்திருப்பவர் தான் பணிபுரியும் காலத்தில் உயிரிழந்தால், இவர்களுடைய குடும்பத்துக்கு தொழிலாளர் வைப்புசார் காப்பீடு திட்டத்தின் (இடிஎல்ஐ) கீழ் இழப்பீடு வழங்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக ரூ.6 லட்சமாக இருந்த இழப்பீடு தொகை, கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியிலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

எதன் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படுகிறது?

பொதுவாக தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் காப்பீட்டுக்காக ஒவ்வொரு ஊழியரின் மாத சம்பளத்திலிருந்து 0.5 சதவீத தொகையை எடுத்து இடிஎல்ஐ கணக்கில் மாதந்தோறும் செலுத்தி வருகின்றன.

இதனால், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், வேறு எந்த காரணத்தாலும் பணியாளர்கள் உயிரிழந்து இருந்தாலும் இந்த இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

இழப்பீடு பெற தேவையான ஆவணங்கள்

* உயிரிழந்தவரின் இறப்பு சான்றிதழ்.
* வாரிசு சான்றிதழ்.
* பணிபுரிந்த நிறுவனத்தின் சார்பாக கையெழுத்து பெற்று விண்ணப்பம்.

மேலுள்ள அனைத்து ஆவணங்களும் மிக அவசியம்.

இழப்பீடு பெற கால அவகாசம்

அதிகபட்சமாக, ஒரு வாரத்துக்குள் விண்ணப்பதாரர்கள் அளிக்கும் வங்கிக் கணக்கில் நேரடியாக இழப்பீடு தொகை, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு செலுத்திவிடும்.

சம்பளத்திற்கேற்ப இழப்பீடு:

உயிரிழந்தவரின் மாத சம்பளம் ரூ.15 ஆயிரத்துக்குக் கீழ் இருந்தால் அதற்கேற்ப இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. தற்போது இழப்பீடு குறைந்தபட்ச தொகையாக ரூ.2.50 லட்சமும், அதிபட்ச தொகையாக ரூ.7 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

See also   தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் பூந்தமல்லி அருகே ரூ. 6.5 லட்சம் பறிமுதல்

மேலும் தொழிலாளர் வைப்புசார் காப்பீடு திட்டத்தின் (இடிஎல்ஐ) கீழ் இழப்பீடு பெறவேண்டுமென்றால், PF கணக்கு வைத்திருக்கும் ஊழியர் குறைந்தது ஒரு வருடமாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

ஒரு வருடத்திற்கும் குறைவாக பணிபுரிந்திருந்தால் அதற்கு ஏற்றவாறு, தொழிலாளர் வைப்புசார் காப்பீடு திட்டத்தின் (இடிஎல்ஐ) கீழ் PF தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தகக்து.