9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழக அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்குக்கு பிறகு ஜனவரி 19-ம் தேதியன்று10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது வகுப்புகள் நடந்து வருகின்றன.இதனை தொடர்ந்து மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் உடல் வெப்பப் பரிசோதனை செய்த பிறகு பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் கிருமிநாசினியால் கைகளைச் சுத்தம் செய்த பிறகே பள்ளி வளாகத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வகுப்பறையில் தனிமனித இடைவெளி,முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பள்ளி மாணவர்கள் பின்பற்றி வருகின்றனர். வகுப்பறையில் ஒரு மேஜைக்கு இருவர் என்ற விதத்தில் 20 அல்லது 25 பேர் மட்டுமே உட்கார அனுமதிக்கப்பட்டுகிறார்கள்.

பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி நேரம் காலை 9.30 முதல் மாலை 4.30 வரை செயல்படும் என்றும் அறிவித்துள்ளது

மாணவர்கள் வீட்டிலிருந்து கட்டாயம் குடிநீர், சாப்பாடு கொண்டு வர வேண்டும். உணவுப் பொருள் உட்பட எதையும் மற்றவர்களுடன் பகிரக் கூடாது. பிறரைத் தொட்டுப் பேசக் கூடாது. கைகுலுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இட நெருக்கடியைத் தவிர்க்க சுழற்சி முறையில் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்தவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

வரும் 8 ஆம் தேதிஅன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

 

See also  பிப்ரவரி 14ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை

Categorized in: