கல்விக்கட்டணத்தை காரணம் காட்டி மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணத்தால் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களிடம் 85% விழுக்காடு கட்டணத்தை வசூல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் மாற்று பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர்.

மாற்று பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சென்று மாற்று சான்றிதழ் கேட்க்கும் போது, மாணவர்கள் பாக்கி கல்விக்கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே மாற்று சான்றிதழ் (TC – Transfer Certificate) வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுத் தொடர்பான விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளை இன்று பிறப்பித்திருக்கிறது. அதன்படி, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி மாற்று சான்றிதழ் (TC – Transfer Certificate) வழங்காமல் இருக்கக்கூடாது என்றும், மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகள் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்று பள்ளிகளுக்கு செல்ல மாணவர்களுக்கு உரிமை உண்டு என்றும் தெரிவித்து இருக்கிறது.

மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகள் மீது புகார்கள் வந்தால், இதனை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

See also  இன்று ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே முடிவு