ஹைலைட்ஸ்:

  • கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் புதிய உச்சம்.
  • இந்தியாவில் தொடர்ந்து ஒரு 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • மகாராஷ்டிராவில் நேற்று ஒரேநாளில் 930 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களுக்கிடையே அச்சம் அதிகரித்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4லட்சத்தை கடந்து விட்டது. இந்நிலையில் தினசரி உயிழப்பும் 4 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. உலகச் சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின் படி கடந்த ஒரு வாரத்தில் உலக கொரோனா பாதிப்பில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு 46% ஆக பதிவாகியுள்ளது. உலக அளவு கொரோனா உயிரிழப்பில் இந்தியாவின் உயிரிழப்பு 25% ஆக பதிவாகியுள்ளது.

இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 29 கோடியே 67 லட்சத்து 75 ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் 19,23,131 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து இருக்கிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 18-44 வயதினர் 2.4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து ஒரு 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் கேரளாவில் 10 மாவட்டங்களிலும், ஆந்திராவில் 7 மாவட்டங்களிலும், கர்நாடகாவில் 3 மாவட்டங்களிலும், தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரேநாளில் 930 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கிறார்கள். மேலும் மகாராஷ்டிராவில் 57,000 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று உருவாகி இருக்கிறது. அதேபோல் மும்பையில் 3,879 பேருக்கு புதிய தொற்றுக்கள் உருவாகி இருக்கிறது. இங்கு ஒரேநாளில் 77 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

புனேயில் 9,084 பேருக்கு புதிய தொற்றுக்கள் உருவாகி இருக்கிறது. ஒரேநாளில் 93 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தற்போது மகாராஷ்டிராவில் 6.41 லட்சம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

See also  கருப்பு பூஞ்சை தொற்று குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! - தமிழக அரசு

சில நிபுணர்கள் கொரோனா வைரஸ் சுழற்சியில் இருக்கும் லெவலைப் பார்க்கும் போது 3ஆம் அலை நிச்சயம் என்று கூறிவரும் நிலையில், வைராலஜிஸ்ட்கள் சிலர் பல்வேறு கணித மாதிரிகளை கணக்கிட்டு வருகிறார்கள். இவர்கள் மே மாதம் மத்தியில் அல்லது மே மாதம் இறுதியில் கொரோனா தாக்கம் சற்று குறையும் என்று கூறுகிறார்கள்.