கொரோனா நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு அரசு கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. இந்த காலக்கெடு பல்வேறு காரணங்களால் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாது எனவும், ஜூலை 1- ஆம் தேதிக்கு பிறகும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

மேலும் பிக்சட் டெபாசிட் போட்டிருப்பவர்களுக்கு 10 சதவீதத்திற்கு பதில் 20% டிடிஎஸ் பிடிக்கப்படும் எனவும், 15ஜி, 15எச் படிவங்களை சமர்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக மூன்று மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய இணை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்து இருக்கிறார். இதன்படி, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

See also  கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் அழைப்பு